40,000 பெண்களின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசப்படம் தயாரித்த கேரள ஸ்டுடியோ... 2 பேர் கைது
கேரளாவில் மணப்பெண்களின் புகைப்படங்களை ஆபாசப்படமாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: திருமணங்களில் எடுக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை, கிராபிக்ஸ் உதவியுடன் ஆபாச புகைப்படங்களாக மாற்றி, இணையத்தில் பதிவேற்றம் செய்த இருவரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா என்ற இடத்தில் சதயம் போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வருகிறது இந்த ஸ்டுடியோ. பிபேஷ், தினேஷ் மற்றும் சதீசன் என்ற மூன்று பேர் இந்த ஸ்டுடியோவை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படம் ஆபாசமாக இணையத்தில் உலா வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்புகைப்படத்தில் கிராபிக்ஸ் உதவியால் தனது தலை, மற்றொரு உடலுடன் ஒட்டியிருந்ததை அப்பெண் கண்டுபிடித்தார். மேலும், அப்புகைப்படம் தனது திருமணத்தன்று எடுக்கப்பட்டது என்பது அவருக்கு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக போலீசில் அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் திருமணத்திற்கு சதயம் ஸ்டுடியோவினர் போட்டோ, வீடியோ எடுத்தது தெரியவந்தது. எனவே, அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட பெண்களின், 40 ஆயிரம் புகைப்படங்கள் அங்கிருந்த கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அந்தப் புகைப்படங்களை ஆபாச வலைதளங்களுக்கு ஸ்டுடியோவினர் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்த கேரள பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. அதோடு, இந்த வழக்கை சிறப்புப் படை அமைத்து, தங்கள் கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் எனவும் அது கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கேரள சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், “சம்பந்தப்பட்ட அந்த ஸ்டுடியோவுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் தினேஷ், சதீசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான, பிபேஷை தேடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க, சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள சதயம் ஸ்டுடியோ கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் இயங்கி வருகிறது. இதுவரை அவர்கள் 1000க்கும் அதிகமான திருமணங்களில் புகைப்படம், வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இந்த திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், இந்த ஸ்டுடியோவின் மூலம் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.