கேரளாவில் ”பத்ம விருதுகள்” பட்டியல் வெளியீடு- விதிமீறல்கள் இல்லை என கேரள அரசு உறுதி
திருவனந்தபுரம் : கேரளாவில் பத்ம விருதுகளுக்கு தகுதியின் அடிப்படையில் 13 பேரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டதாகவும், இதில் விதிமீறல்கள் நடைபெறவில்லை எனவும், கேரள மாநில கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்துள்ளார்.
கேரளத்திலிருந்து பத்ம விருதுகளைப் பெறுவதற்காக 13 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அந்த மாநில அரசு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக கேரள மாநில கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, "பத்ம விருதுகளுக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 13 பேரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை" என்றார்.
இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.