இஸ்லாமிய மாணவிகள் பற்றி கேரள பேராசிரியர் ஆபாச பேச்சு... பதிலுக்கு பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
Recommended Video
திருவனந்தபுரம் : இஸ்லாமிய மாணவிகளின் ஆடைகள் பற்றி ஆபாசமாக பேசிய பேராசிரியரை கண்டிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் மாணவிகள் தர்பூசணி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கேரளாவில் ஃபரூக் கல்லூரியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் டி ஜவ்ஹர் முனாவிர். இவர் கோழிக்கோடு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முனாவிரின் இந்த பேச்சு இஸ்லாமிய மாணவிகளின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் முனாவிர் "நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன், இங்கு 80 % பெண்கள் படிக்கின்றனர், இவர்களிலும் இஸ்லாமிய மாணவிகளே அதிகம். இவர்கள் தங்களது ஹிஜாப்களை சரியாக அணியாமல், மார்பகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிவதாக கூறியுள்ளார்."
பேராசிரியரின் ஆபாச பேச்சு
இதோடு நின்றுவிடாமல் பெண்களின் மார்பகங்கள் பற்றி தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டு ஆபாசமாகவும் பேசியுள்ளார். பேராசிரியரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு மாணவிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் என்பவர் மாணவர்களை பார்த்து பாடம் நடத்தாமல் அவர்களின் மார்பகங்களை பார்த்து ஏன் பாடம் நடத்துகிறார் என்று கேரள மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாணவியின் புகைப்படத்தால் பரபரப்பு
இதனிடையே முனாவிருக்கு எதிராக தியா சானா என்ற மாணவி தனது மார்பில் தர்பூசணி பழத்தை வைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முகநூலில் இருந்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டதோடு, தியா சானா தனது முகநூல் கணக்கை பயன்படுத்த முடியாமல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏன் தியா இப்படி செய்தார்?
பெண்கள் தாங்கள் என்ன அணிய விரும்புகிறார்களோ அதை அணியும் உரிமை உள்ளது. எப்போது இந்த சமூகம் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக காட்டுவதை நிறுத்தும் என்று கேள்வி கேட்கும் விதமாக தியா சானா பேராசிரியரின் ஆபாச பேச்சுக்கு பதிலடியாக இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறியுள்ளார்.
கல்லூரி முன்பு போராட்டம்
இதனிடையே பேராசிரியரின் பேச்சை கண்டித்து சில மாணவ அமைப்புகள் ஃபரூக் கல்லூரியின் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். முனாவிரை பணிநீக்கம் செய்ய வேண்டும் அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வர் அளித்த விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஃபரூக் கல்லூரியின் முதல்வர் முனாவிர் 3 மாதங்களுக்கு முன்பு பேசியதை இப்போது பிரச்னையாக்க வேண்டாம். அவரின் பேச்சில் ஒரு பகுதி மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.