ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்
ஆலப்புழா: கேரள மாநில ஆலப்புழாவில் பணிமுடித்து விட்டு வீடு திரும்பிய பெண் காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலப்புழாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா புஷ்பாகரன் (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை 3-ஆவது வகுப்பு படித்து வருகிறார்.
சவுமியாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சவுமியா கடந்த சனிக்கிழமை பிற்பகல் பணியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
தப்ப முயற்சி
அப்போது அங்கு காரில் வந்த போக்குவரத்து போலீஸ்காரர் அஜாஸ், சவுமியாவின் மோட்டார் சைக்கிள் மீது இடித்து அவரை கீழே தள்ளினார். அப்போது சுதாரித்துக் கொண்ட சவுமியா, தப்பியோட முயற்சி செய்தார்.
பெட்ரோல்
அப்போது அவரை துரத்திச் சென்று மடக்கி பிடித்த அஜாஸ், அவரை கடுமையாக தாக்கினார். இதையடுத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சவுமியா உயிரிழந்தார்.
காரணம் தெரியவில்லை
இந்த தீவிபத்தில் 40 சதவீதம் தீக்காயமடைந்த அஜாஸ் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் எதற்காக சவுமியாவை எரித்துக் கொன்றார் என தெரியவில்லை.
விசாரணை
அஜாஸ் இன்னும் மயக்கத்திலேயே இருப்பதால் அவர் கண்விழித்தப் பிறகுதான் விசாரணை நடத்த முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். பெண் போலீஸ் ஒருவரை சக போலீஸ்காரர் ஒருவரே தீ வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.