ஓட்டு போட்டால் டோக்கன்... குலுக்கலில் பரிசு... தேர்தல் கமிஷனின் "வல்லிய" ஐடியா.. கேரளாவில்!
திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, ஓட்டுப்பதிவை அதிகரிக்க, ஓட்டுப்போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள மலைப்பகுதி மிகுந்த பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிகம் பேர் வாக்குப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. மாநில அளவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகும் சூழலில், இந்த மாவட்டத்தில் மட்டும் 65 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன.
அதிலும் குறிப்பாக மலைப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் மிக மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின்றன.
புதிய குலுக்கல் திட்டம்...
இதனால், கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற கேரளாவில், பத்தினம்திட்டாவில் இம்முறை அதிக வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் புதிய பரிசுத் திட்டத்தை அமல்படுத்துகிறது.
ஓட்டுப் போட்டால் போதும்...
இதன்படி, வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சிகளைப் போலவே தேர்தல் ஆணையமும் அதிரடி பரிசுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் பரிசுகளைப் பெற வாக்காளர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவது தான்.
டோக்கன்...
மே மாதம் நடைபெறவுள்ள கேரள சட்டசபைத் தேர்தலின் போது, இம்மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட எண்கள் கொண்ட டோக்கன் வழங்கப்படும்.
பரிசுகள்...
பின்னர் தேர்தல் முடிவடைந்ததும், ஒருநாள் குலுக்கல் நடைபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதனை அம்மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு...
இத்தகைய பரிசு திட்டங்கள் மூலம் வாக்காளர்களின் ஆர்வத்தை தூண்டி, வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்தில் நம்பிக்கை. இது எந்தளவிற்கு பலனைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.