கழுத்தை நெறிக்கும் அளவிற்கு வரதட்சணை டிமாண்ட்- தைரியமாக திருமணத்தை நிறுத்திய கேரளப் பெண்!
திருச்சூர்: கேரளாவில் புதுமணப்பெண்ணாக வேண்டிய ரெம்யா ராமச்சந்திரன் என்ற பெண் மாப்பிள்ளை வீட்டார் அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்டதால் தன் திருமணத்தையே தைரியமாக ரத்து செய்துள்ளார்.
மேலும் இந்த திருமண ரத்து குறித்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஸ்டேட்டஸ் ஒன்றும் வைரலாக பரவி வருகின்றது.
கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்த ரெம்யா கோவாவில் வசித்து வருகின்றார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "நிச்சயதார்த்தத்துக்கு பிறகுதான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை பேச்சை ஆரம்பித்தனர்.
வரதட்சணை டிமாண்ட்:
நிச்சயதார்த்தத்துக்கு முன்பு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிய மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு 50 பவுன் நகையும், ஐந்து லட்சம் பணமும் கேட்டனர்.
எனக்குத்தான் இழப்பு:
இப்படியான ஒரு நம்பகத்தன்மையற்ற ஆணை திருமணம் செய்வதும் இவ்வாறான ஒரு குடும்பத்துக்கு மருமகளாக செல்வதும் எனக்கு தான் பெரும் இழப்பாக இருக்கும்.
திருமணமே வேண்டாம்:
அதனால்தான் இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன்" என கூறியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொடுமைகளை களைவோம்:
மேலும் அவர், இந்த நிகழ்வை தனி மனித தாக்குதலுக்கு பயன்படுத்தாமல் சமூகத்தில் நிலவும் வரதட்சணை மாதிரியான கொடுமைகளுக்கு எதிராக பயன்படுத்துமாறு அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.