ஏப்ரல் 1 முதல் மண்ணெண்ணெய் நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மண்ணெண்ணெய்க்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவுக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான போலி இணைப்புகள் ரத்து செய்யப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. அதேபோல் மண்ணெண்ணெய்க்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மண்ணெண்ய்க்கான மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அரியானா, ராஜஸ்தான் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் இத்திட்டம் முதலில் அமலுக்கு வருகிறது.
தற்போது பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் 12 ரூபாய்க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கும் பயனாளிகள், இனி லிட்டர் 43 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத் தொகையான மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
நேரடி மானியத் திட்டம் மூலம் 4 கோடி போலியான சமையல் எரிவாயு நுகர்வோர் களையெடுக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.