விசா மோசடி வழக்கை ரத்து செய்க கோரி அமெரிக்க கோர்ட்டில் தேவ்யானி மனு
டெல்லி: தன் மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சர்ச்சையில் சிக்கி நாடு திரும்பியுள்ள அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அமெரிக்காவுக்கான துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே(39) தனது வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு போலீசார் அவரது ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவரை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் தேவ்யானி தன் மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் 4 பக்கங்கள் கொண்ட மனுவை கடந்த 9ம் தேதி நீதிபதி சாரா நெட்பர்ன் முன்பு தாக்கல் செய்தார்.
கோப்ரகடேவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கு மேலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று டேனியல் தெரிவித்தார்.