அரை ஆடைக்கு மாறிய காந்தி எங்கே, டெய்லி 5 டிரஸ் போடும் மோடி எங்கே.. குஷ்பு பிரசாரம்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் பகுதிகளில் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தமிழர் பகுதிகளில் ஆதரவு திரட்டுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நடிகை குஷ்புவும் டெல்லி சென்றுள்ளனர்.
வாஜிபூர், ஜே.ஜே.காலனி ஆகிய இடங்களில் இளங்கோவன் காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏழைகளுக்காக காந்தி வாழ்ந்தார். ஏழைகளின் நிலை அறிந்து தானும் அரை ஆடைக்கு மாறினார். ஆனால் வளர்ச்சி என்று பேசி வரும் மோடி தினமும் 5 ஆடம்பர ஆடைகளை அணிகிறார். இதுதான் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.
இதேபோல், தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், நொய்டா பகுதிகளில் நடிகை குஷ்பு தமிழர்கள் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ‘கை' சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது மக்கள் மத்தியில் குஷ்பு பேசுகையில், ‘எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ நாட்டில் அமைதி நிலவ கை சின்னத்துக்கு வாக்காளியுங்கள்' என்றார்.
தொடர்ந்து இன்றும், நாளையும் டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இளங்கோவனும், குஷ்புவும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.