கீகீயா பண்றீங்க.. சுத்தமா துடைச்சு வைங்க ஸ்டேஷனை.. கோர்ட் கொடுத்த நூதன தண்டனை!
ஓடும் ரயிலில் கீகீ சாலஞ்ச் செய்த இளைஞர்களுக்கு 3 நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில கோர்ட் தண்டனை கொடுத்தது.
மும்பை: ஓடும் ரயிலில் கீகீ சாலஞ்ச் செய்த இளைஞர்களுக்கு மூன்று நாட்கள் அந்த ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது.
சமீபகாலமாக கீகீ சாலஞ்ச் என்ற விளையாட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பைத்தியக்காரத்தனமான இந்த விளையாட்டுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள்.
உலகம் முழுக்க இளைஞர்களிடையே இது பிரபலமாகி வருகிறது. சவால் என்னவென்றால், ஓடும் காரில் கீகீ என்ற ஒரு ஆங்கில பாடலை போடு விட்டு ஒருபக்கம் கதவை திறந்து வைத்து விட்டு கீழே இறங்கி ரோட்டில் ஆட வேண்டும். வாகனம் நகரும் வேகத்திற்கு ஈடு கொடுத்து கூடவே ஆடிக்கொண்டு வர வேண்டும். அப்படி ஆடுவதை காரின் உள்ளே இருப்பவர் மொபைலில் படம் பிடித்து, அதை சமூக வலைதளங்களில் போட வேண்டும்.
இதுதான் கீகீ சாலஞ்ச். இதை செய்த பலர் கீழே விழுந்து அடிபட்டுள்ளனர். ஆனாலும் விடுவதாக இல்லை. இந்த நிலையில், அதுபோல் மும்பை நகரை சேர்ந்த ஷ்யாம் ஷர்மா (24), திருவ் (23), நிஷாந்த் (20) என்ற மூன்று இளைஞர்கள் சென்ற வாரம் கீகீ சாலஞ்ச்சை ஓடும் ரயிலில் இருந்து இறங்கி செய்து அதை தங்களது யூடியூப் சானலில் போட்டனர்.
இது வைரலாகி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களை ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாசி ரயில்வே நீதிமன்ற ஸநீதிபதி அவர்களுக்கு 3 நாட்கள் அந்த ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.