பள்ளிக் குழந்தைகளை கடத்த இப்படியும் ஒரு கும்பல் கிளம்பியிருக்கு: பெற்றோர்களே உஷார்!
பெங்களூர்: பெங்களூரில் குழந்தையை கடத்த வந்த போலி பள்ளி வேன் டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தாய்மார்கள் பெங்களூர் அம்மாக்கள்(Mums of Bangalore) என்ற பக்கத்தை ஃபேஸ்புக்கில் துவங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த பக்கத்தில் ஒரு பெண் எழுதிய செய்தி பிற தாய்மார்களை அதிர வைத்துள்ளது.
அந்த பெண் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
பெங்களூர் உத்தரஹள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் சில்ட்ரன்ஸ் ஹோம் பள்ளியில் எனது தோழியின் மகன் முதலாம் வகுப்பு படிக்கிறான். திங்கட்கிழமை காலை குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேன் வந்தது. அந்த வேனில் இருந்த டிரைவரும், உதவியாளரும் வழக்கமாக வரும் வாகனம் பழுதடைந்துவிட்டதால் தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
அவர்களை நம்பாத குழந்தையின் தந்தை பள்ளியின் போக்குவரத்து மேனேஜருக்கு போன் செய்து கேட்டதற்கு நாங்கள் மாற்று வாகனம் எதையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அந்த டிரைவரும், உதவியாளரும் தப்பியோடிவிட்டனர். குழந்தைகளை கடத்த புதிய கும்பல் ஒன்று கிளம்பியுள்ளது. தாய்மார்களே உஷார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Fake' van comes to pick up student in Bengaluru, school issues notice alerting parents http://t.co/sIHZRECd7P pic.twitter.com/fWwxKS2kRj
— TheNewsMinute (@thenewsminute) September 11, 2015
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த இமெயிலில் கூறியிருப்பதாவது,
எங்கள் பள்ளி எப்பொழுதும் தனியார் வேன்களை பயன்படுத்தாது. எங்கள் வாகனம் பழுதடைந்தாலும் எங்களிடம் உள்ள பிற பேருந்துகளை தான் அனுப்புவோம். குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்துச் செல்வது மற்றும் வீட்டில் விடும் நேர மாற்றங்கள் நடந்தால் பள்ளியில் இருந்து நோட்டீஸ் அல்லது எஸ்.எம்.எஸ். வந்துள்ளதா என பெற்றோர் பார்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.