கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டம்... பாதுகாப்பு வேண்டாம் என்று கெஜ்ரிவால் அடம்!
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று பிடிவாதமாக கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், உஷாராக இருக்குமாறும், பாதுகாப்பை பலப்படுத்துமாறும் டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லி காவல்துறையும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வரைச் சந்திக்க டெல்லி கூடுதல் காவல்துறை ஆணையர் திட்டமிட்டுள்ளார். கெஜ்ரிவாலிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளார்.
அதேசமயம், தனக்கு எந்தவகையான விஐபி பாதுகாப்பும் தேவையில்லை என்று கெஜ்ரிவால் டெல்லி காவல்துறைக்குத் திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதற்காக கெஜ்ரிவாலைக் கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்திருக்க இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.