பைபிள் படிக்காத சிறார்களை உத்தரத்தில் தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்
இதைத்தான் போதித்தாரா இயேசுநாதர்?.. பைபிள் படிக்காத சிறார்களை தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்
நோய்டா: உத்திரப்பிரதேசத்தில் பைபிள் படிக்காத சிறுவர்களை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் உத்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படித்து வரும் சிறார்கள், சரியாக பைபிள் படிக்கவில்லை என்பதால் அவர்களை உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு அதன் நிர்வாகிகள் அடித்துள்ளனர்.
இதுகுறித்து வந்த புகாரைத் தொடர்ந்து இரண்டு இல்லங்களிலும் தங்கிப் படித்து வந்த 30 சிறார்களை போலீஸார் ரெய்டு நடத்தி மீட்டுள்ளனர்.
ஏழைக் குழந்தைகள்...
இந்தக் குழந்தைகள் அனைத்தும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பலர் ஆதரவற்றோர். இவர்களை கட்டாயமாக மதம் மாற்றம் செய்துள்ளதாகவும் போலீஸாருக்குப் புகார்கள் வந்துள்ளன.
புகார்...
பாதிக்கபட்ட 9 வயது சிறுவன் ஒருவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இல்லங்களை இம்மானுவேல் சேவா குழுமம் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.
சித்ரவதை...
இவர்களை மின்விசிறியின் உத்தரத்தில் கட்டி தொங்க விட்டு கொடூரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பட்டினி போட்டுள்ளனர். பைபிளைப் படிக்காவிட்டால் இதே கதிதானாம்.
சிறைகளான அறைகள்...
மேலும் கடந்த 3 வருடமாக கரப்பான் பூச்சிகள் நிரம்பிக் கிடக்கும் சாப்பாடுதான் கொடுத்து வந்துள்ளனர். அழுக்கடைந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான சூழலில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். சிறையைப் போல இவர்களது நிலை இருந்துள்ளது.
கட்டாயம்...
மாதம் ஒருமுறை அதுவும் கால் மணி நேரம் மட்டுமே இவர்களுக்கு பெற்றோரைப் பார்க்க அனுமதி தரப்பட்டுள்ளது. அங்கு பைபிள் படிப்பது கட்டாயம். எப்போதும் பைபிள் படித்தபடியே இருக்க வேண்டும். பைபிளை முழுமையாக மனப்பாடம் செய்யும் வரை விட மாட்டார்களாம்.
பெல்ட் அடி...
உணவு, உடை ஆகியவற்றை வாங்க வரிசையில் வர வேண்டும். அப்போது பைபிள் வாசகத்தை சொல்ல வேண்டும். தவறாகச் சொன்னால் அடி உதை, சித்திரவதை தானாம். உணவும், உடையும் தர மாட்டார்களாம். பெல்டால் அடிப்பார்களாம்.
அம்பலம்...
ஜோஷுவா தேவராஜ் என்பவர் மூலம் தனது பிள்ளையை இங்கு சேர்த்ததாக அந்த சிறுவனின் தாயார் கூறியுள்ளார். தற்போது போலீஸ் புகார் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.