"கடத்தல்காரர்கள்" தாக்கினார்கள், எங்களது போலீஸ் சுட்டது... சொல்கிறார் நாயுடு
திருப்பதி: போலீசார் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதாலேயே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நேற்று அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்தியதாகவும், அதைத் தடுக்க முற்பட்ட போது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் ஆந்திர போலீசார் விளக்கம் அளித்திருந்தனர். ஆனபோதும், இந்த துப்பாக்கிச் சூடு ஏற்கனவே திட்டமிடப் பட்ட ஒன்று என அம்மாநில எதிர்க்கட்சிகளே குற்றம் சாட்டி வருகின்றன.
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் போன் மூலமாக கேட்டறிந்தார் ராஜ்நாத் சித். அப்போது ராஜ்நாத் சிங்கிடம் சந்திரபாபு நாயுடு அளித்த விளக்கத்தில், ‘கொல்லப்பட்டவர்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், அதற்கான உரிய ஆதாரங்கள் ஆந்திர போலீசாரிடம் இருப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.
மேலும், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின்படி, கடத்தல்காரர்களைக் கைது செய்ய திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிவித்த நாயுடு, கடத்தல்காரர்கள், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க என்கவுண்டர் நடத்தப்பட்ட விதம், காயமடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிக்கையாக அளிக்க இருக்கிறது ஆந்திர அரசு.