கிரண்குமார் ரெட்டிக்கு செருப்பு!
ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனது புதிய கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ''ஜெய் சமக்யாந்திரா கட்சி" என பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கு 'செருப்பு' சின்னத்தை தேர்ந்து எடுத்தார். இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்த விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், தனது கட்சி சின்னத்தை கிரண்குமார் ரெட்டி அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்கி பேசும்போது கூறியதாவது:
ஏன் செருப்பு சின்னம்
''மக்கள் அனைவரும் செருப்பு அணிகிறார்கள். அதனால் இந்த சின்னம் எளிதில் அவர்களிடம் பிரபலமடையும். செருப்பு, அதனை அணிபவர்களின் சுமையை தாங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது.
சமத்துவத்தின் சின்னம்
சாதி, மதம் போன்ற எந்த பாகு பாட்டையும் காட்டுவதில்லை. சமத்துவத்தின் சின்னமாக செருப்பு இருக்கிறது.
ராமராஜ்யத்திற்கு
ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது. அதுபோல, இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்.
ஒருங்கிணைந்த ஆந்திரா
மாநில பிரிவினைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதபடி நீங்கள் பணியாற்ற வேண்டும். ''ஜெய் சமக் யாந்திரா" என்பது வெறும் கோஷம் அல்ல. அது லட்சியம் என்றார் கிரண்குமார்.
இளைஞர்களின் கட்சி
இது இளைஞர்கள் கட்சியாக இருக்கும். மக்களாகிய நீங்கள் சொல்லும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவேன். இதற்காக உங்களிடம் கருத்து கேட்டேன். உங்கள் கருத்துப்படி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்" என்று அவர் பேசினார்.