திரையுலகினர் விருதுகளைத் திருப்பித் தருவதற்கு ஆமிர்கான் மனைவி கிரண் ராவ் ஆதரவு
மும்பை: சகிப்புத்தன்மைக்கு எதிரான போக்கைக் கண்டித்து திரையுலகினர் விருதுகளைத் திருப்பித் தருவது சரியானது, இது பாராட்டுக்குரியது என்று நடிகர் ஆமிர்கானின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிரண் ராவ் கூறியுள்ளார்.
திரையுலகினரின் இந்த உணர்வையும், முடிவையும் தான் மதிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் கிரண் ராவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சகிப்புத்தன்மை அவசியம்
சகிப்புத் தன்மை அவசியம். அதற்குப் பாதிப்பு வருகிறபோது அதை எதிர்த்துக் குரல் எழுவது இயற்கையானது. அப்படி குரல்கள் எழும்போது அதற்கு ஆதரவாக நிற்க வேண்டியது மற்றவர்களின் கடமையாகும்.
எனக்கு மகிழ்ச்சியே
இதுதான் தற்போது நடக்கிறது. நடப்பவை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள் அதிக அளவில் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும். தவறைக் கண்டிக்க தயங்கக் கூடாது.
கலாச்சார தூதர்களின் துணிச்சல்
நாட்டின் கலாச்சாரத் தூதர்களின் செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அதை மதிக்கிறேன். அவர்கள் தங்களது கருத்துக்கள் மூலம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் என்றார் கிரண் ராவ்.