ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார் தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த்
பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த் தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது கூட்டணி வேட்பாளர்களுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடன் தேர்தல் வியூக பணிகளை ஆற்றி வருபவர் கிஷோர் பிரஷாந்த் (41). இவரது வியூகம்தான் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மூலம் நாட்டின் பிரதமராக்கியது.
இந்த தேர்தல்களுக்கு பிறகு கிஷோருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு இடையே சிறிது கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து கிஷோர் அங்கிருந்து விலக நினைத்தார்.
இதையடுத்து அவர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். அப்போது நிதிஷ் கட்சியினர் முன்பு கூறுகையில் இவர்தான் நமது எதிர்காலம் என்றார். பிரஷாந்த் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற போவது கடந்த வாரம் அவர் ஹைதராபாத்தில் மாணவர்களுடன் நடந்த உரையாடலின்போதே உறுதி செய்தார்.
நிதிஷ்குமாரின் சாணக்கியன் பிரஷாந்த் என்று அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்டது. பாஜகவுடன் நிதிஷ் கைகோர்த்தவுடனும் இது அப்படியே தொடர்ந்து வருகிறது. நிதிஷ் குமாருக்கும் லாலு பிரசாத்துக்கும் இடையே உள்ள மோதலை அமைதிப்படுத்தி நட்பை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடத்தப்பட்டன.
லாலு சிறையில் இருப்பதால் கட்சியை முழுக்க முழுக்க அவரது மகன் தேஜஸ்வியே பார்த்து கொள்வதால் இந்த சமாதான முயற்சி எடுப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை பிரஷாந்த் முன்னெடுத்து வெற்றி காண்பார் என்று கூறப்படுகிறது.