முத்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை கூடாது: பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை
பெங்களூர்: கேரளாவில் தொடங்கி, டெல்லி, மும்பை என்று போய் சென்னையில் சுழன்றடித்த முத்தப்போராட்டம் இப்போது பெங்களூருவில் மையம் கொண்டுள்ளது.
முத்தப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர் கிஸ் ஆப் லவ் அமைப்பினர். ஆனால் இந்த முத்தப்போராட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்துள்ளது. எனவேதான் முத்த போராட்டத்தை தடுக்க முயல்வோர் மீது கடுமைடான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2ஆம் தேதி கொச்சியில் கொச்சி, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் கடந்த 22ஆம் தேதி முத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு கர்நாடகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டம் நடந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என கருதி அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே வரும் 30ஆம் தேதி முத்த போராட்டம் நடத்த பெங்களூரு காவல் ஆணையத்திடம் மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறையை ஏற்க முடியாது. அப்படி எதாவது சம்பவங்கள் ஏற்பட்டால் அது மாநிலத்தின் மேன்மையை பாதிக்க செய்யும். இருப்பினும் இந்த முத்த போராட்டம் குறித்த இறுதி முடிவை முதல்வர் சித்தராமையா மேற்கொள்வார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசினார். அப்போது, "சில அமைப்பினர் முத்த போராட்டத்துக்காக மீண்டும் அனுமதி கோரியுள்ளனர். அவர்களது கோரிக்கைக்கு இரண்டு நாட்களில் பதில் அளிக்கப்படும். அவர்களிடம் நாங்கள் போராட்டத்துக்கான நோக்கம் மற்றும் அதற்கான விவரத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.
இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட யாருக்கும் உரிமை இல்லை. அப்படி ஏதேனும் நடைபெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த போராட்டம் குறித்து நிலவர அறிக்கையை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
முத்தப்போராட்டம் இன்னும் எத்தனை சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறதோ தெரியலையே?