பின்னால் வந்து விழுந்த பட்டம்.. செங்கோட்டையில் மோடி உரையின்போது பரபரப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றிய போது பட்டம் ஒன்று இறங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்தினார். அவர் உரையை நிறைவு செய்யும் தருவாயில், வானில் பறக்கவிடப்பட்ட கருப்பு பட்டம் ஒன்று, அவர் உரையாற்றிய போடியத்தின் பின்பக்கமாக வந்து இறங்கியது.
நல்ல வேளையாக பிரதமர் மீது அது படவில்லை. வேறு யாருக்கும் அந்த பட்டத்தால் இடையூறு ஏற்படவில்லை. இதனால் பிரதமர் தனது உரையை தொடர்ந்தார். சுதந்திர தினம் மற்றும் ஜென்மாஷ்டமி தினங்களை முன்னிட்டு, டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9100 டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டை மற்றும் நகரம் முழுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.