ஓடும் ரயிலில் பெண்ணிடம் “சில்மிஷம்” – மூன்று ராணுவ வீரர்கள் கைது!
கான்பூர்: அலகாபாத்தில் ஓடும் ரயிலில் ராணுவ வீரர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய பெண் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத்திலிருந்து திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்ற 28 வயது பெண்ணிடம், அதே ரயில் பெட்டியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க கழிவறைக்கு அருகே சென்ற அப்பெண்ணை ராணுவ வீரர்கள் தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.
சமயோசித முடிவு:
ஆனால், சமயோசிதமாக செயல்பட்ட அப்பெண், கதவில் ஒட்டப்பட்டிருந்த அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
ராணுவ வீரர்கள் கைது:
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்களை கைது செய்தனர்.
குடிபோதையால் வந்த வினை:
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி தெரிவிக்கையில், "இச்சம்பவம் தொடர்பாக மூன்று ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
ராணுவத்திற்குத் தகவல்:
வீரர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ராணுவத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகள் வந்த பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.