இது அழிந்துவரும் புலி, காக்கப்பட வேண்டிய புலி: 'புலி'க்காக குரல் கொடுக்கும் அமிதாப் பச்சன்
மும்பை: அழிந்து வரும் புலி இனத்தை காப்பாற்றுவது நம் நாட்டு குடிமக்கள் அனைவரின் கடமை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில புலிகள் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மும்பை போரிவாலி பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் கூறுகையில்,
மகாராஷ்டிரா மாநில காடுகளில் உள்ள புலிகளை காப்பாற்ற நான் வனத்துறையினருக்கு உதவி செய்வேன். அழிந்து வரும் புலிகள் இனத்தை காப்பாற்றுமாறு நான் குரல் கொடுக்க உள்ளது பெருமையாக இருக்கிறது.
புலிகளை காக்க வனத்துறை எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகிறேன். சஞ்சய் காந்தி தேசிய பூங்கா நகரின் மத்தியில் இருப்பது மும்பையின் பாக்கியம். அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புலிகளை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும் என்றார்.
சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் சபாரி செல்ல புலிகள், சிங்கங்களின் புகைப்படம் உள்ள 2 சிறப்பு பேருந்துகளை அமிதாப் துவக்கி வைத்தார்.