கொச்சி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி... - முதல் ரயிலில் பயணம்
கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து முதல் ரயிலில் பயணம் செய்தார்.
திருவனந்தபுரம்: கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் ரயிலில் பயணம் செய்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கியது. ஆலுவா முதல் கொச்சி மகாராஜா கல்லூரி வரை 25 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை 13.4 கிமீ தூரம் பணிகள் நிறைவடைந்தன. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
கொச்சி கலூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உட்பட பலர் பங்கேற்று ஒற்றுமையுடன் அருகருகே அமர்ந்து முதல் ரயிலில் பயணம் செய்தனர். கடும் மழைக்கு இடையேயும் கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்கவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
கொச்சி மெட்ரோ ரயில் கண்ட முதல்வர்கள்
கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் 1999ல் ஈ.கே நாயனார் அரசு இருக்கும்போது திட்டமிடப்பட்டது. அதன்பின் 2008 ஜனவரியில் அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின் 2013ல் உம்மன்சாண்டி அரசு காலத்தில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பினராய் விஜயன் முதல்வராக இருக்கும்போது முடிக்கப்பட்டுள்ளது.
வேகமாக முடிந்த திட்டம்
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு 2012 செப்டம்பர் 13ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு 2013 ஜூன் 7ல் பணிகள் தொடங்கப்பட்டன.
உம்மன் சாண்டி முயற்சி
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே முடிக்க அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தினார். அப்போது முடியவில்லை என்றாலும் ஒரு வருட கால தாமதத்திற்கு பின் தற்போது நிறைவடைந்துள்ளது. இது அதிகவேகமாக முடிக்கப்பட்ட பணி ஆகும்.
வராத உம்மன் சாண்டி
மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பங்கேற்கவில்லை. இது குறித்து கூறிய அவர், என்னை அழைக்காததால் எனக்கு வருத்தம் இல்லை. கேரளா மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு கொச்சி மெட்ரோ உதாரணம். எனக்கு வேறு ஒரு விழா இருப்பதால் மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு நாளில் நான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வேன் என்று உம்மன்சாண்டி கூறினார்.