துணிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்தவர் கைது
கொச்சி: கொச்சியில் உள்ள மால் ஒன்றில் இருக்கும் ஆடை கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போனில் கேமராவை ஆன் செய்து வைத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி நகரில் பிரபல மால் ஒன்று உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் ஒருவர் தனது கணவருடன் அந்த மாலுக்கு சென்றுள்ளார். அவர் மாலில் உள்ள துணிக்கடைக்கு சென்று ஆடை வாங்கியுள்ளார். வாங்கிய ஆடையை அவர் அணிந்து பார்க்க பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றார்.
அப்போது அந்த கடையில் வேலை பார்க்கும் ஷாஜஹான்(22) என்ற ஊழியர் ஓடி வந்து அறையில் உள்ள துணிகளை அகற்றுவதாகக் கூறி சென்றுள்ளார். அவர் அறையை விட்டு வந்த உடன் உள்ளே சென்ற அந்த பெண் ஆடையை மாற்றும் முன்பு அந்த இடத்தை சோதனை செய்துள்ளார்.
சோதனையில் அந்த அறையில் செல்போனில் கேமரா ஆன் செய்து வைக்கப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். உடனே கடை மேனேஜரிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கடைக்கு வந்து ஷாஜஹானை கைது செய்தனர். அவர் கடந்த வாரம் தான் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.