மாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்!
கொல்கத்தா: மேஜிக் செய்ய முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மேஜிக் நிபுணர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் மேற்குவங்காளத்தில் நடந்துள்ளது.
மேற்குவங்காளத்தைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் சஞ்சால் லஹ்ரி. இவர் ஜாதுகர் மந்தராகே என்ற பெயரில் பல மேடை மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நீரில் மேஜிக் செய்ய வேண்டும் என்பது இவரது நீண்டகால ஆசையாக இருந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் நீரில் நடப்பதாகக் கூறி, சாகசம் புரிய முயற்சித்தார் சஞ்சால், ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் 36 பூட்டுகளுடன் இறங்கினார். ஆனால், அவரால் சமாளிக்க முடியாமல் வெளியேறினார்.
பெரும்பாலும் தண்ணீருக்குள் அவரது சாகச முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனால் எப்படியும் நீர் சாகசம் ஒன்றை நடத்திக் காட்ட வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட்டுள்ளார் சஞ்சால்.
அதன்படி, கடந்த ஞாயிறன்று தனது கை, கால்களைக் கட்டிக்கொண்டு கொல்கத்தாவின் ஹவுரா பாலத்திலிருந்து ஆற்றில் இறங்கி, அதிலிருந்து தானே மீண்டுவரும் சாகசத்தைச் செய்யப்போகிறேன் என அறிவித்தார். வழக்கம்போல், இந்த சாகசத்தைக் காணவும் ஏராளமான மக்கள் அங்கு கூடினர்.
கிரேன் ஒன்றின் மூலம், கை, கால்கள் கட்டப்பட்டு பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் ஆற்றில் இறக்கிவிடப்பட்டார். அவர் எப்படி அந்தப் பெட்டியில் இருந்து வெளியில் வருகிறார் என பார்க்க மக்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அச்சமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசாருடன், பேரிடர் மீட்புக் குழுவும் விரைந்து வந்தது. நீச்சல் வீரர்களைக் கொண்டு சஞ்சாலைத் தேடும் பணி தொடங்கப்பட்டது.
24 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பின் சஞ்சாலின் உடலை போலீசார் நேற்றிரவு மீட்டனர். அவரது சாகச முயற்சி கடைசியில் அவரது உயிருக்கே எமனாகி விட்டது. சஞ்சாலின் மரணத்தால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.