நள்ளிரவில் தாக்கிய 7 பேர்... போலீஸ் உதவிக்கு வரவில்லை - உஷோஷி சென்குப்தா குமுறல்
கொல்கத்தா: நள்ளிரவில் 7 பேர் கொடூரமாக வழிமறித்து தாக்கிய போது காவல்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை என்று பிரபல மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தனக்கு நடந்த வன்முறை சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உஷோஷி சென்குப்தா 2010 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர். இவர் நேற்று வேலை முடிந்து சக பணியாளருடன் திரும்பிக்கொண்டிருந்த போது நள்ளிரவு ஆகிவிட்டது. அப்படியே ஹோட்டலில் டின்னரும் முடித்து விட்டு உபேர் கால் டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த வாகனத்தை இடிப்பது போல 4 இருசக்கர வாகனங்களில் வந்தனர். காரை டிரைவர் வேகமாக ஓட்டியும் முந்திக்கொண்டு வந்த அந்த இளைஞர்கள் வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை இழுத்துப்போட்டு அடித்தனர். அதை வீடியோவாக படம் பிடித்தார் நடிகை உஷோஷி.
இதனை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் : பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறி அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
அருகில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் உதவிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள உஷோஷி, வெகு தாமதமாக போலீசார் வந்த போது அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார்.
இது பெண்களுக்கான பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் மட்டுமல்ல பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால், நானும், எனது சக பணியாளரும் நள்ளிரவில் பணி முடிந்து வரும் போது துன்புறுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வீடியோ ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா இணை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகை மீதான தாக்குதல் புகாரின் பேரில் ஷேக் ராகிட், பர்தின் கான், ஷபீர் அலி, இம்ரான் அலி, வாஸிம், கனி, அஷிப் கான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.