கவனக் குறைவாக பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பையில் போட்ட நர்ஸ்... சஸ்பெண்ட்!
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கவனக்குறைவாக பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பலுர்கட் நகர மருத்துவமனையில் கடந்த வாரம் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போது உப்புக் கலந்த சலைன் திரவம் செலுத்த, அக்குழந்தையின் இடதுகையில் கட்டு போடப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் குழந்தை உடல்நிலைத் தேறியதைத் தொடர்ந்து, அக்குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த கட்டு கடந்த 12ம் தேதி அகற்றப்பட்டது. அப்போது கவனக்குறைவாக செயல்பட்ட நர்ஸ், தவறுதலாக அக்குழந்தையின் விரலையும் வெட்டி, அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.
இச்சம்பவம் குறித்து அக்குழந்தையின் தந்தை, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் செய்தியாளர்கள் மத்தியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மருத்துவமனையில், குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட நர்ஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற அலட்சியப் போக்கை அனுமதிக்க முடியாது. அந்த நர்சை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். நர்சின் செயல் அஜாக்கிரதை மட்டுமல்ல; கிரிமினல் குற்றம் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.
கையில் போடப்பட்டிருந்த கட்டை அகற்றும் போது குழந்தையின் விரலை நர்ஸ் வெட்டிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.