பாஜகவின் கோலி மாரோ.. துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க கோஷம்.. லாடம் கட்டுவதில் மமதாஜி மும்முரம்!
கொல்கத்தா: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கொல்கத்தா பேரணியில் பங்கேற்றவர்கள் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க என கோஷம் எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கோஷத்தை எழுப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மேற்கு வங்க அரசு.
சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கோலி மாரோ என கோஷம் எழுப்பினர். அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.
பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே கோஷங்களை இப்போது எழுப்புவதில்லை. அதற்கு பதிலாக வன்முறையை தூண்டும் வகையில் கோலி மாரோ என்றுதான் முழக்கம் எழுப்புகின்றனர். டெல்லி சட்டசபை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இப்படி கோஷம் எழுப்பியதால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் கோலி மாரோ கோஷம் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி , கோலி மாரோ கோஷம் எழுப்பியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றார்.
மேலும் கோலி மாரோ கோஷம் எழுப்புவர்களை வீடியோ பதிவுகளில் பார்த்தால் போலீசாரிடம் தெரிவிக்கவும்; நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் மமதா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கோலி மாரோ கோஷம் எழுப்பிய சிலர் கொல்கத்தாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதில் மேற்கு வங்க போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.