கொல்கத்தா துறைமுகத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி- மமதா புறக்கணிப்பு
கொல்கத்தா: வரலாற்று சிறப்பு வாய்ந்த கொல்கத்தா துறைமுகத்துக்கு பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். இந்நிகழ்ச்சியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.
கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். கொல்கத்தா நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொல்கத்தா துறைமுகத்தின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் இந்தியாவின் வளர்ச்சியிலும் கொல்கத்தா துறைமுகம் மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது.
இத்துறைமுகம் இனி டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரால் அழைக்கப்படும். இந்தியாவின் தொழில்துறை, ஆன்மீகம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது கொல்கத்தா துறைமுகம். இதன் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது இந்தியாவின் சக்தி வாய்ந்த அடையாளமாக இதை உருவாக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி அமுல்படுத்தவில்லை. இத்திட்டத்தில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக ஹெளராவில் பேளூர் மடத்தில் பேசிய பிரதர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்றார். ஆனால் கொல்கத்தா துறைமுக நிகழ்ச்சியில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.
இந்நிகழ்ச்சியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணித்தார். மேலும் கொல்கத்தாவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இன்றும் பேரணி நடைபெற்றது.