'எபோலா': ஆப்பிரிக்கர்களுடன் செக்ஸ் வேண்டாம்- பாலியல் தொழிலாளர்களுக்கு அறிவுரை
கொல்கத்தா: எபோலா வைரஸ் பீதியால் ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் உறவு வேண்டாம் என்று கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி நைஜீரியா, கினியா, லைபீரியா, சியர்ரா லியோனில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
எபோலா வைரஸால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மருந்து
எபோலா வைரஸுக்கு மருந்து இல்லை. அதனால் இந்த வைரஸ் தாக்கினால் பெரும்பாலும் மரணம் தான் என்பதால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சோனாகாச்சி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி சிவப்பு விளக்கு பகுதிகளில் மிகவும் பிரபலம் ஆனது. சோனாகாச்சியும் எபோலா பீதியில் உள்ளது.
காரணம்
சோனாகாச்சிக்கு இந்தியர்கள் தவிர வெளிநாட்டவர்களும் வருவது உண்டு. அப்படி வரும் ஆப்பிரிக்கர்களுக்கு எபோலா இருந்தால் பாலியல் தொழிலாளர்களுக்கும் அது பரவி விடுமே என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
அபாயம்
எபோலா பாதிப்பு உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கும் அது பரவிவிடும் என்பதால் பாலியல் தொழிலாளர்களை வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது.
ஆப்பிரிக்கர்கள்
ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் உறவு கொள்ள வேண்டாம் என்று பாலியல் தொழிலாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பான தர்பார் மஹிலா சமன்வாயா கமிட்டியின் உறுப்பினர் மஹஸ்வேதா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க மருந்தை அனுப்பி வைக்குமாறு லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன்
சர்லீப் அமெரிக்காவை கேட்டுக் கொண்டார். அதன்படி அமெரிக்காவும் தான் தயாரித்துள்ள மருந்தான இசட்மாப்பை லைபீரியாவுக்கு அனுப்பி வைத்தது.
லைபீரியா
அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள மருந்தை சோதனை முறையில் நோயாளிகளுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது லைபீரியா. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.