யு.எஸ். பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை போட்டோ எடுத்து மிரட்டிய இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்
கொல்கத்தா: அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை சில புகைப்படங்களை காட்டி மிரட்டிய காரணத்திற்காக கொல்கத்தாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அவினாஷ் குப்தா. சாப்ட்வேர் என்ஜினியர். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.
அப்போது குப்தாவுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கமாகி உறவு வைத்துக் கொண்டுள்ளனர். அந்த பெண் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்ற பிறகு அவருக்கும், குப்தாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குப்தா தானும், அந்த பெண்ணும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இமெயில் மூலம் அவரின் கணவருக்கு அனுப்பிவிட்டார். இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
குப்தா சில புகைப்படங்களை காட்டி தன்னை மிரட்டுவதாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி குப்தாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.