பலாத்காரத்திலிருந்து தப்பிக்க 2வது மாடியிலிருந்து குதித்த பெண்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பலாத்காரத்திலிருந்து தப்பிப்பதற்காக இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண், நேற்று தன் ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கேயிருந்த ஆண் நண்பரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திலேயே தூக்கக் கலக்கத்திற்கு ஆளானார் அப்பெண்.
உடனடியாக அப்பெண்ணை பலாத்காரம் செய்ய அவர்கள் முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகில் இருந்த பால்கனி வழியாக இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அவர் குதித்த இடத்தில் மணல் கொட்டிக் கிடந்ததால், அதிர்ஷ்டவசமாக அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மாடியில் இருந்த 3 ஆண்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.