மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் வானவேடிக்கை நடத்திய கோவில் நிர்வாகம்
கொல்லம்: கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் அதை மீறி பட்டாசுகள் வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை 1 மணி முதல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. காலை 3.30 மணிக்கு பட்டாசு வெடிக்கையில் தீப்பொறி பறந்து சென்று பட்டாசு பொட்டலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் கோவில் வளாகத்தில் தீப் பிடித்து எரிந்தது அங்கிருந்த பக்தர்களில் 107 பேர் உடல் கருகி பலியாகினர், 350 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் 4 ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.