நீட் மாணவர்கள் குவியும் கோட்டா சிட்டி.. 5000 கோடி பிசினஸ்.. எப்படி சாத்தியம்?
கோட்டா: ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் பயிற்சி தேர்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டும் நகரம் என்றால் அது ராஜஸ்தானின் கோட்டா நகரம் தான். நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவு தேர்வு, ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் விரும்பும் இடமாக கோட்டா நகரம் உள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் மிகவும் கஷ்டப்பட்டு படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற நிலை உள்ளது. மொத்தம் உள்ள 720 மார்க்கில் யார் அதிக மார்க் எடுக்கிறார்களோ அவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்பதால் இந்த தேர்வு மிக கடுமையாக உள்ளது, இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படுவதால் பல லட்சம் பேர் மருத்துவ கனவுடன் உள்ளவர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தலைச்சிறந்த கோச்சிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். சாமானியர்களால் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. அந்த வகையில் நீட் தேர்வுக்கு என்றே பிரத்யேகமாக பல கோச்சிங் சென்டர்கள் உள்ள நகரமாக ராஜஸ்தானின் கோட்டா நகரம் உள்ளது. இங்கு தான் இந்தியாவில் இந்த முறை நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பயிற்சி பெற்றார். 2வது ரேங்க் உள்பட பலர் இங்கு பயிற்சி எடுத்தவர்கள் தான்.
கோச்சிங் சென்டர்கள்
கோச்சிங் சென்டர்கள் நிறைந்து வழியும் கோட்டா நகரில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் பணம் புழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கோட்டா நகருக்கு வந்து ஓராண்டு கோச்சிங் எடுத்தால் மத்திய அரசு நடத்தும் எந்த நுழைவு தேர்விலும் வெற்றி உறுதி என்று உறுதியளிக்கிறார்கள். இதற்கு சான்றாக ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் இவர்கள் எல்லாம் இங்கு படித்துதான் டாக்டர் ஆனார்கள் என்றும், ஐஐடியில் சேர்ந்தார்கள் என்றும் போர்டுகள் தொங்கும்.
1,50,000 மாணவர்கள்
எங்கிருக்கிறது இந்த நகரம் ராஜஸ்தானின் கோட்டா நகரம் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரமாகும். இங்கு ஆண்டு தோறும் 1,50,000த்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் ஹாஸ்டல் எடுத்து தங்கி ஓராண்டு பயிற்சியை முடித்து நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுகிறார்கள்.
விடுதி வசதி
கோட்டா நகரில் ஏராளமான கோச்சிங் சென்டர்கள் விடுதி வசதியுடனும் , விடுதி வசதி இல்லாமலும் செயல்படுகின்றன. இங்குதான் நீட் தேர்வில் இந்தியாவிலேயே அதிகம் பேர் வெற்றி பெறும் தலைச்சிறந்த பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. நீட் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்திய மற்றும் ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்கிறார்.
எவ்வளவு கட்டணம்
பயிற்சி மையத்தில் கட்டணம் எவ்வளவு: இங்கு பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு இரண்டு தவணையாக கட்டணம் வசூலிக்கிறார்கள் . 4 விதமாக கோர்ஸ்கள் உள்ளன. இதற்கு 1.19 லட்சம் முதல் 1.30 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் தங்கும் விடுதி வசதியும் உள்ளது பிஜி ஹாஸ்டல் வசதியும் உள்ளது. 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் வரை பிஜி ஹாஸ்டல் கட்டணம் வசூலிக்கிறார்கள், சாப்பாடு கட்டணம் தனி. வசதிஅதிகம் உள்ளவர்கள் 15 ஆயிரம் முதல் 20 வரை கூட மாதத்திற்கு பணம் கொடுத்து பிஜி ஹாஸ்டலில் தங்குகிறார்கள்..
நீட் தேர்வு
அப்படி என்ன பயிற்சி அளிக்கிறார்கள் என்று பார்த்தால், நீட் தேர்வுக்கான இயற்பியல் வேதியியல், உயிரியல் பாடங்களை மாதிரி தேர்வுகள் மூலம் கரைத்துக்குடிக்க வைப்பார்கள். எப்படியெல்லாம் கேள்வி வரும் என்று முடிவு செய்து அதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு மாதமும் தயார் படுத்துவார்கள். மாணர்வர்கள் தேறுவார்களா இல்லையா என்பதை இந்த ஓராண்டு பயிற்சியிலேயே கோச்சிங் சென்டர்கள் வைத்துள்ளவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். தினமும் மணிக்கணக்கில் படிக்க வேண்டியது வரும். இந்த ஓராண்டை நீட் தேர்வுக்கு என்றே அர்பணிக்க வேண்டும். அப்படி லட்சங்களை செலவு செய்து படித்தால் நீட் தேர்வு வெற்றி சாத்தியமாகும்.
கோட்டா நகரம்
சிம்பிளாக சொல்வது என்றால் நம்மூரில் முன்பு நாமக்கல்லில படிப்பவர்களே தமிழகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதலிடம் பிடிப்பார்கள். அதற்கு காரணம் அங்குள்ள பள்ளிகளின் கோச்சிங் காரணம். அதற்கு லட்சங்களை கொட்ட வேண்டிய நிலைஇருந்தது. அதைத்தான் கோட்டா நகரம் செய்கிறது. என்ன இந்தியாவே நீட் , ஜேஇஇ தேர்வுக்காக அங்குதான் செல்கிறது. லட்சங்களை செலவு செய்து ஓராண்டை தியாகம் செய்தால் எம்பிபிஎஸ் கனவு சாத்தியம் என்கிற நிலை கோட்டா நகரம் ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் தேர்வை வைத்து மிகப்பெரிய பிசினஸ் கோட்டாவில் நடக்கிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் மாணவர்களே வெற்றியாளர்கள் என்கிற அளவுக்கு இயந்திரத்தனமாக நீட் தேர்வை மாற்றிவிட்டார்கள்.