போலாவரம் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் 3 மாநில 'கோயா' பழங்குடிகள்!!
ஆந்திராவில் மழைக்காலங்களில் கோதாவரி ஆற்றுக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் அந்த தண்ணீரை சேமிப்பதற்காக போலாவரம் அணைத்திட்டத்தை கம்மம்-கோதாவரி மாவட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இந்த அணை திட்டத்தின் போது நீரில் மூழ்கி விடும் பகுதிகளான கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவில் இணைக்க வகை செய்து மத்திய அரசு தற்போது அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
இதற்கு தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டத்தினால் 3 மாநிலங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான கோயா இன பழங்குடிகள் தங்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பதால் அந்த இனத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 3 மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கோயா பழங்குடி இனத்தவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடாவிட்டால் 3 மாநில கோயா பழங்குடிகளும் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் எச்சரித்துள்ளனர்.