கோழிக்கோடு டேபிள் டாப் ஏர்போர்ட் மோசம்.. இது விபத்தல்ல, கொலை.. கொதிக்கும் விமான பாதுகாப்பு நிபுணர்
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்குவதை பல சர்வதேச விமான நிறுவனங்கள் முன்பே நிறுத்தி விட்டன. இதற்கு காரணம், அந்த விமான நிலையம் அமைந்துள்ள இடமும் அதன் ஓடுபாதை அம்சமும் பாதுகாப்பானது இல்லை என்பதால்தான்.
Recommended Video
கோழிக்கோடு விமான நிலையத்திற்கு டேபிள் டாப் ரன்வே என்ற பெயர் உண்டு. இதற்கு காரணம், ஒரு சாப்பாட்டு மேஜை எப்படி இருக்குமோ, அப்படித்தான் கோழிக்கோடு விமான நிலைய ரன்வே பகுதியில் அமைந்துள்ளது.
சுற்றி வரை பள்ளம், நடுவே ஒரு பகுதி மட்டும் ஓடு பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள்.. பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் தகவல்
டேபிள் டாப்
சாப்பாட்டு டேபிளின் மீது ஓரத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்தால், ஒருவேளை நாம் அதை தட்டி விட்டால் அந்த தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து உடையுமே, அதேபோலத்தான் இங்கு விமானங்கள் தரை இறக்கப்படும்போது ரன்வேயில் ஓரத்திற்கு சென்று விட்டால் கட்டுப்பாடு கிடைக்காமல் கீழே விழுந்து நொறுங்கும் வாய்ப்பு ஏற்படும். அப்படித்தான் நேற்று துபாயிலிருந்து கோழிக்கோடு வந்து இறங்கிய ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
3வது முறை தரையிறக்கம்
கடுமையான கனமழை காரணமாக ரன்வே பகுதி ஈரப்பதமாக இருந்தது. இந்த நிலையில்தான் விமானத்தை தரையிறக்கும் போது விமானி கடும் சிரமத்தை உணர்ந்து உள்ளார். இரண்டு முறை முயற்சி செய்து முடியாமல், மூன்றாவது முறைதான் விமானத்தை தரை இறக்கி உள்ளார். அது ஓடுபாதையில் இருந்து சறுக்கிக் கொண்டு பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து போனது. இந்த சம்பவத்தில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சர்வதேச விமானங்கள்
டேபிள் டாப் ரன்வே பாதுகாப்பானது கிடையாது என்பதால்தான் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும், தங்களது பெரிய வகை விமானங்களான, போயிங் 777, ஏர்பஸ் a330 போன்ற விமானங்களை கோழிக்கோடு இயக்குவதை எப்போதோ நிறுத்திவிட்டன. இதுபற்றி விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் ரங்கநாதன் கூறுகையில், 9 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அறிக்கையில் கோழிக்கோடு விமான நிலையம், விமானங்கள் தரையிறங்குவதற்கு பாதுகாப்பானது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறார்.
குறைவான நீளம்
கேரளாவில் உள்ள 4 விமான நிலையங்களில் கோழிக்கோடுதான் இருப்பதிலேயே மிகவும் குறைவான நீளம் கொண்ட ஓடு பாதை உள்ள விமான நிலையம். குறைந்த தூரம் கொண்ட இந்த ஓடுதளம் மழை காரணமாக கடுமையாக சேதம் அடைந்திருந்தது. விமானம் தரை இறங்கி சற்று தூரம் ஓடி பிறகு நிற்க வேண்டும். ஒருவேளை அப்படி நிறுத்த முடியாவிட்டால் ஓடு பாதைக்கு அந்த பக்கம் சற்று தூரத்திற்கு பாதுகாப்புக்கான இட வசதி இருக்கவேண்டும்.
விபத்து இல்லை, கொலை
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுபாதை நீளமும் குறைவு, பாதுகாப்பு வசதிக்கான இடமும் கிடையாது என்கிறார் அவர். இது விபத்து என்று கருதமுடியாது. கொலை என்றுதான் கருதப்பட வேண்டும். இது ஒரு குற்றச் செயல் என்றும் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஒரு மலைக்குன்றின் மீது விமான நிலையம் இருப்பதை போன்ற தோற்றத்தில்தான் கோழிக்கோடு விமான நிலையம் அமைவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
200 அடி பள்ளம்
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓடு பாதையின் இரு பக்கத்துக்கு அந்தப் பக்கம் 200 அடி ஆழ பள்ளம் காணப்படுகிறது. குருட்டுத்தனமாக, விமானங்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கிறார். ஆனால், காங்கிரஸ் எம்பி சசிதரூர் இதை மறுக்கிறார். கோழிக்கோடு விமான நிலையம் சிறியது என்று கூறிவிட முடியாது. அங்கு நீண்ட ஓடுதளம் உள்ளது. ஓடுதளத்தில் அருகாமையில் பள்ளத்தாக்கு இருப்பதாக கூற முடியாது. மோசமான வானிலை காரணமாக தான் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.