கோழிக்கோடு விமான விபத்து.. 1990களிலேயே விபத்தில் சிக்கி மறுபிறவி எடுத்த பைலட்.. உறவினர் உருக்கம்
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் தீபக் சாத்தே, இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி ஆலோசகர் நிலேஷ் சாத்தே என்பவருக்கு உறவு முறையில் கஸின்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் வந்தே பாரத் மிஷனில் பணியாற்றுவதில், பெருமைப்படுவதாக தீபக் சாதே தன்னிடம் கூறியதாக உருக்கமான கடிதத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் நிலேஷ்.
இந்த கடிதம் தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாக சுற்றி வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி?
மகிழ்ச்சி
"அவர் ஒரு வாரத்திற்கு முன்பே என்னை போனில் அழைத்தார், எப்போதும் போலவே மகிழ்ச்சியாக இருந்தார். 'வந்தே பாரத்' மிஷன் பற்றி நான் அவரிடம் கேட்டபோது, அரபு நாடுகளிலிருந்து நம் நாட்டு மக்களை மீண்டும் அழைத்து வருவதில் பெருமிதம் கொள்கிறேன் "என்று குறிப்பிடுகிறார் நிலேஷ் சாத்தேன்.
பலத்த காயம்
1990களின் ஆரம்பத்தில் விமானப்படையில் இருந்தபோது, தீபக் ஒரு விமான விபத்தில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். மண்டை ஓடுவரை பல காயங்கள் ஏற்பட்டனவாம். தீபக் சுமார் 6 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீண்டும் பைலட்டாகி பறப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் அவரது வலுவான மனதிடம், சக்தி மற்றும் பைலட் தொழில் மீதான அன்பு அவரை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்தது. அது ஒரு அதிசயம். 2005ம் ஆண்டுக்கு பிறகு தீபக், கமர்சியல் விமான பைலட்டாக பதவியேற்றார். இவ்வாறு கூறியுள்ளார் நிலேஷ் சாத்தே.
36 வருட அனுபவம்
36 வருட பைலட் அனுபவமுள்ள விமானியான தீபக் சாத்தேவுக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது தந்தை கர்னல் வசந்த் சாத்தே தனது மனைவியுடன் நாக்பூரில் வசிக்கிறார். இவரது சகோதரர் விகாஸ் சாத்தே ஜம்மு பிராந்தியத்தில் பணியாற்றும் போது வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி.
விமான விபத்து
நேற்று இரவு துபாயிலிருந்து கோழிக்கோடு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி உடைந்து விழுந்ததில் தீபக் சாத்தே மற்றும் அவரது இணை விமானி உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.