யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களுக்கு வாய்ப்பு-மரபை உடைத்த கேஆர் நாராயணன் flashback
தனிப்பெரும்பான்மை கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு வாய்ப்பு என்கிற மரபை உருவாக்கியவர் கே.ஆர். நாராயணன்.
Recommended Video
டெல்லி: இந்திய அரசியலில் யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது என்கிற மரபை உருவாக்கியவர் மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்.
நாடு விடுதலை அடைந்தது முதல் ஜனாதிபதிகளும் ஆளுநர்களும் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளைத்தான் ஆட்சி அமைக்க அழைத்தனர். இதனடிப்படையில்தான் 1996-ம் ஆண்டு பாஜக தலைவராக இருந்த வாஜ்பாயை ஆட்சி அமைக்க அப்போதைய ஜனாதிபதி ஷங்கர் தயாள் சர்மா அழைத்தார்.
ஆனால் வாஜ்பாய் அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் 13 நாட்களிலே வாஜ்பாய் அரசு ராஜினாமா செய்தது. இதையடுத்து ஐக்கிய முன்னணி அரசுகள், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
களத்தில் பாஜக, ஐமு, காங்கிரஸ்
இந்த அரசுகள் 2 ஆண்டுகள்தான் நீடித்தன. திமுகவை ஐக்கிய முன்னணி அரசில் இருந்து வெளியேற்றாததால் ஐகே குஜரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனால் ஆட்சி கவிழ்ந்து லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற இத் தேர்தலில் ஐக்கிய முன்னணி கூட்டணியில் தமாகா, திமுக, சிபிஎம் கட்சிகள் இடம்பெற்றன. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக மதிமுக, சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தா பாண்டியனின் யுசிபிஐ ஆகியவை இருந்தன.
தேசிய அளவில் பாஜக தனித்து 182 இடங்களில் வென்றது. அதன் தலைமையிலான கூட்டணி 254 இடங்களைக் கைப்பற்றின. காங்கிரஸ் கூட்டணி 168; ஐக்கிய முன்னணி 93 இடங்களைக் கைப்பற்றின. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 272 இடங்கள்,
புதிய மரபை உருவாக்கிய கே.ஆர். நாராயணன்
அப்போது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவையோ அதன் கூட்டணியையோ கே.ஆர். நாராயணன் உடனே ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. 10 நாட்கள் யாரையும் அழைக்காமல் பெரும் குழப்பமாக இருந்தது. கே.ஆர். நாராயணனைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சி பற்றியெல்லாம் கவலைப்படவில்லை; யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களை அழைப்பது என்கிற புதிய மரபை கடைபிடித்தார். அதனால் 10 நாட்களுக்குப் பின் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் கடிதங்களை வாஜ்பாயிடம் இருந்து கே.ஆர். நாராயணன் கேட்டார்.
வாஜ்பாயை மிரட்டிய ஜெ.
ஆனால் அப்போதும் வாஜ்பாயால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை கே.ஆர். நாராயணன் அழைத்த நாளில் தர இயலவில்லை. அதனால் நாராயணனை அவர் சந்திக்கவும் இல்லை. ஏனெனில் திமுக அரசை தமிழகத்தில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; அமைச்சர் பதவிகள் தரப்பட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் வாஜ்பாயை மிரட்டிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஒருவழியாக கட்சிகளின் ஆதரவு கடிதங்களை பார்த்துவிட்டு வாஜ்பாயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்னர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் கே.ஆர். நாராயணன். அந்த அரசும் 13 மாதங்கள்தான் நீடித்தது என்பது தனிக்கதை.
குதிரை பேரம் நடத்த உதவும் ஆளுநர்
இப்போது கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்கள் இருப்பதாக ஆளுநரிடம் கூறுகின்றனர். ஆனால் தனிப்பெரும்பான்மை மட்டும் பெற்ற பாஜகவை குதிரை பேரம் நடத்தவிட்டு ஆட்சி அமைக்க ஆளுநர் வழிவகுப்பது நிச்சயம் ஜனநாயகப் படுகொலைதான்!