கிருஷ்ண ஜெயந்தி.. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் வாழ்த்து! தவிர்த்த திமுக
டெல்லி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பகவான் கிருஷ்ணர் பிறந்த நாள், நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் "கிருஷ்ணரின் வாழ்க்கையும், அவரது உபதேசங்களும், கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே மற்றும் வெவ்வேறு பாதைகள் ஒரே லட்சியத்தை சென்றடையும் என வலியுறுத்துபவை. இந்த நன்னாளில் நல்லொழுக்கப் பாதையைக் பின்பற்றவும், சொல், செயல் மற்றும் சிந்தனையில் நேர்மையைக் கடைப்பிடிக்கவும் உறுதி ஏற்போம். கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவும் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உயிர்களைக் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் அனை வருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
"அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்" என்று உரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளை கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலிருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைத்து, கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு, பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டும் என்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதனை தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியிருந்தார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், வழக்கம்போல வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.