ஒரு நாள் முதல்வர் போல் மே தினத்தன்று ஒரு நாள் கண்டக்டராக மாறிய போக்குவரத்து கழக இயக்குநர்
கேரள போக்குவரத்து கழக இயக்குநர் மே தினத்தையொட்டி ஒரு நாள் கண்டக்டராக மாறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்து கழக இயக்குநர் மே தினத்தையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பஸ் கண்டக்டராக மாறிய சம்பவம் வைரலாகி வருகிறது.
கேரள மாநில சாலை போக்குவரத்து கழக இயக்குநராக இருப்பவர் டாமின் தச்சங்கரி. இவர் இன்றைய தினம் நீல நிற சீருடையில் பேருந்தின் கண்டக்டராக பணியாற்றினார்.
திருவனந்தபுரத்திலிருந்து குருவாயூர் செல்லும் பேருந்தில் அதாவது 285 கி.மீ தூரம் கொண்ட பேருந்தில் 119 கி.மீ.தூரம் வரை தச்சங்கரி டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கினார். ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி இதுபோன்று நடத்துநராக டிக்கெட் கிழித்து கொடுத்ததை பார்த்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அவரை பாராட்டினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இதுநாள் வரை நடத்துநர்கள் செய்யும் பணிகள் எனக்கு தெரியாது. அவ்வாறிருக்கையில் நான் எப்படி அவர்களை வழிநடத்துவது. பயணிகளுடன் கலந்துரையாடல் நடத்தி நிறை குறைகளை கேட்கவும் ஒரு வாய்ப்பாக இருந்தது.
எங்கள் கழகத்தின் முக்கிய பகுதியே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள்தான். அவர்கள் 32 ஆயிரம் பேர் உள்ளனர். அதனால் இன்று ஒரு நாள் கண்டக்டர் பணியை செய்ய ஆசைப்பட்டேன். இத்தோடு நிறுத்தமாட்டேன், எனக்கு இன்னொரு ஆசையும் உள்ளது, அதாவது டிரைவர் ஆகவேண்டும் என்பதுதான். அதற்காக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளேன் என்றார்.
தச்சங்கரி ஏற்கெனவே காவல் துறை கூடுதல் டிஜிபியாக இருந்தவர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் பதவியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.