கேஎஸ்ஆர்டிசிக்கு ரூ.22 கோடி போண்டி.. கலவரத்தால் வந்த வினை.. கவலையில் கர்நாடகா!
பெங்களூரு: தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் வெறித்தனமாக தாக்கி தீ வைத்து எரித்ததன் விளைவையும், நஷ்டத்தையும் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனம் சந்தித்து வருகிறது. கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இதுவரை ரூ. 22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
கர்நாடகத்தில் தமிழக வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் குறி வைக்கப்பட்டன. இருப்பினும் கர்நாடகத்தைப் போல இல்லாமல் தமிழகத்தில் பிரச்சினை ஏற்பட்ட வேகத்தில் முடிவுக்கு வந்து விட்டது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் வருவதில்லை. அதேபோல தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்திற்குள் செல்லாமல் உள்ளன.
செம நஷ்டம்
இதன் காரணமாக கேஎஸ்ஆர்டிசி நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இப்படியே நிலைமை தொடர்ந்தால் மிகப் பெரிய சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்று கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல்
அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளதாம். இருப்பினும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கியத் தீர்ப்பை அறிவிக்கவுள்ளதால் அதைப் பொறுத்தே சேவை தொடங்குவது முடிவு செய்யப்படுமாம்.
செப்டம்பர் 5 முதல்
செப்டம்பர் 5ம் தேதி முதல் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் தமிழகத்திற்குள் வராமல் உள்ளது. இதுகுறித்து கேஎஸ்ஆர்டிசி பொது மேலாளர் விஸ்வநாத் கூறுகையில், ஓசூர் சாலையில் அத்திபலே, கனகபுரா சாலை மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்திதல் பந்திப்பூர் வரை மட்டுமே தற்போது எங்களது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு மக்கள் நடந்து போய் தமிழக அரசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கிறார்கள். அதேபோல தமிழக அரசுப் பேருந்துகளும் அவர்களது எல்லையுடன் நிற்கின்றன என்றார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து
கேஎஸ்ஆர்டிசி விஜிலன்ஸ் இயக்குநர் பிஎன்எஸ் ரெட்டி கூறுகையில், அடுத்த வாரத்திலிருந்து பஸ்களை இயக்க உத்தேசித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து உள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தால் பஸ்கள் மீண்டும் சேவையைத் தொடங்கும் என்றார் ரெட்டி.