ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். இதே குமார் விஸ்வாஸ் மீது ஏற்கெனவே கூறப்பட்ட கள்ளக் காதல் புகார் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது பிரசாரப் பணியாற்ற வந்த பெண் தொண்டர் ஒருவருடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக அஜய் வஹ்ரா என்பவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் இந்த விவகாரம் குமார் விஸ்வாஸின் மனைவிக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை குமார் விஸ்வாஸ் மறுத்த போதும் இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மற்றொரு ஒரு பெண் குமார் விஸ்வாஸ் மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தையும் அந்த பெண் நாடியுள்ளார்.
ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தி மனைவியை நாயை ஏவி கடிக்க விட்டார் என்ற புகார் எழுந்திருந்தது. தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பெண்கள் விவகாரத்தில் சிக்கி வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.