கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ்... மகளிர் ஆணையம் சம்மன்!
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் மகளிர் அணி தொண்டருடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி மகளிர் ஆணையம் குமார் விஸ்வாஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது பிரசாரப் பணியாற்ற வந்த பெண் தொண்டர் ஒருவருடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அஜய் வஹ்ரா என்பவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் இந்த விவகாரம் குமார் விஸ்வாஸின் மனைவிக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை குமார் விஸ்வாஸ் மறுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணார்ச்சி காரணமாக தன் மீது இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவருக்குப் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருப்பதாகவும் விஸ்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அஜய் வஹ்ரா.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி குமார் விஸ்வாஸுக்கு டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, உட்கட்சி மோதல்களால் சிதறு போயுள்ள ஆம் ஆத்மி கட்சியில் இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.