நேற்று ரங்கநாதர்.. இன்று லஷ்மி நரசிம்மர்.. கோயில்களில் குமாரசாமி தொடர் வழிபாடு
கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி ஹாசன் லஷ்மி நரசிம்மர் கோவிலில் குமாரசாமி வழிபட்டார்.
Recommended Video
பெங்களூரு : கர்நாடகத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி கவுடா ஹசன் மாவட்டத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானது. இதனையடுத்து ஆளுநரின் அழைப்பில் பேரில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில், எடியூரப்பாவை பதவியேற்க அழைப்புவிடுத்த ஆளுநருக்கு எதிரான காங்கிரஸ் - மஜத கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டனர்.
அதன்படி, சனிக்கிழமை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் ஆதரவோடு மஜத கட்சி குமாரசாமி கவுடா தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதியானது.
Karnataka Chief Minister-designate HD Kumaraswamy offered prayers at Lakshmi Narasimha Temple in Hassan. pic.twitter.com/wn63nmIrua
— ANI (@ANI) May 21, 2018
இந்நிலையில் நேற்று மாலை திருச்சி வந்த குமாரசாமி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர் , அடுத்து திருப்பதி சென்று வழிபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு, நாளை மறுதினம் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.