குடகிலிருந்து ஒரு அழுகுரல்.. குமாரசாமி கண்ணீர்விட இதுதான் காரணமாம்!
8-ம் வகுப்பு மாணவனை குமாரசாமி நேரில் வரவழைத்து பேசினார்.
குடகு: "முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் நான் ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை" என்று கண்ணீர் சிந்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார் குமாரசாமி. குமாரசாமியின் கண்ணீருக்கும், வேதனைக்கும், அவ்வாறு மன வருத்தத்தில் பேசியதற்கும் யார் காரணம் தெரியுமா? 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன்தான் என கூறப்படுகிறது.
கடந்தசில தினங்களாக பெய்து வரும் மழையானது கர்நாடகத்தையே திணறடித்து வருகிறது. தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும் கொட்டி தீர்த்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது குடகு பகுதி. இந்த மாவட்டம் முழுவதுமே கனமழை நீரால் சூழ்ந்து தீவு போல்ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் நீர்தான். கரண்ட் கிடையாது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி பல நாள் ஆகிவிட்டது. ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
ஆதங்கத்துடன் வெளிப்பாடு
அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தான். அதில் தங்கள் மாவட்டம் மழை நீரால் எப்படி தத்தளித்து கிடக்கிறது, தாங்கள் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வருகிறோம், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ல. ஏன் மாநில முதலமைச்சர் குமாரசாமியே தங்களது குடகு பகுதியை புறக்கணிக்கிறார் என்று அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியதுடன், மிகுந்த ஆதங்கத்துடன் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தான்.
சமூகவலைதளங்களில் வைரல்
மேலும் தனது பேச்சில் குடகுதான் காவிரியின் பிறப்பிடம். இங்கிருந்து போகும் தண்ணீர்தான் மைசூர், மாண்டியா, ஏன் மெட்ராஸ் (தமிழ்நாட்டை மெட்ராஸ் என்று குறிப்பிடுகிறான்) வரை போய் வளம் சேர்க்கிறது. ஆனால் குடகில் பயிர்கள் அதிக நீரால் அழிகின்றன. எனவே எங்களுக்குத்தான் முதலில் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருந்தான் சிறுவன். அந்த சிறுவனின் பெயர் ஃபதேர் ஆகும். வயது 13தான். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதன் விளைவு முதலமைச்சரின் பார்வையில் வந்து சேர்ந்தது. இதுதான் குமாரசாமியை கண்ணீர்விட்டு நா தழுதழுத்து பேச காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
நேரில் நன்றி
சிறுவன்தானே என்று பாராமல் அவனின் மனக்குமுறலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்த குமாரசாமி அதனை செயல்படுத்த களமிறங்கினார். சிறுவன் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட வந்துவிட்டார். அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் குறித்து அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது வேண்டுகோளை தனக்கு வீடியோ மூலம் வெளியிட்ட அந்த சிறுவனை நேரில் வரவழைத்து மறக்காமல் சந்தித்தார் குமாரசாமி. கூடவே நன்றியினையும் அவனுக்கு கூறினார்.
நெகிழ்ச்சியில் சிறுவன்
அதற்கு சிறுவனோ, "எங்கள் பகுதிக்கு இதுவரை எந்த முதலமைச்சர்களும் வரவில்லை. குடகு பகுதியை அவர்கள் மறந்தேபோய்விட்டார்கள். ஆனால் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி" என்றான். கூடவே தங்கள் பகுதியில் ஜூனியர் கல்லூரி ஒன்றையும் திறக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் முதல்வரிடம் வைத்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குமாரசாமி சிறுவனுக்கு பதிலளித்தார். "எங்கள் மாவட்டத்தையே புறக்கணித்து விட்டீர்கள்" என பகிரங்க குற்றச்சாட்டு கூறியும் தன்னை முதல்வர் அழைத்து பேசியதால் சிறுவன் மிகுந்த நெகிழ்ச்சியில் தற்போது உள்ளார்.