டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் குமாரசாமி.. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
டெல்லி: கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
கர்நாட சட்டசபை தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக பெரும்பான்மையில்லாமல் ஆட்சியமைத்தது. இதுதொடர்பான வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா.
இதையடுத்து தேர்தல் முடிவுக்கு பின் கூட்டு சேர்ந்த மஜத - காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. இந்நிலையில் நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் மஜத கட்சியின் குமாரசாமி.
இந்த பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் அமைச்சரவை குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசிக்கவும் பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை பங்கேற்க அழைக்கவும் இன்று டெல்லி சென்றார் குமாரசாமி.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்தித்த குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னதகா பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குமாரசாமியை சந்தித்தார்.