ஆட்சியை கவிழ்க்க முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்!
பெங்களூரு: தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். தனது அமைச்சரவையை கலைக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார்.
துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எல்லாம் எனக்கு தெரியும்
இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சரமாரியாக குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது, எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.

பேரம் பேசுகிறார்கள்
லாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 9 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.

அமைதியாக இருக்க மாட்டேன்
அவர்கள் எனது ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.

எனக்கு எதிராக இல்லை
ஜனாதிபதி இன்று பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பெலகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து அமைச்சர்களும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த அமைச்சரும் எனக்கு எதிராக செயல்படவில்லை.

பாஜக எம்எல்ஏக்கள்
பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.

அடுத்து அக்டோபர் 2
இப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது. இவ்வாறு கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசினார்.