உ.பி யில் கும்பமேளா... இதுவரை 50,000 பேரை காணவில்லை... புகார்கள் குவிந்தன
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கும்பமேளா நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக உறவினர்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற நகரமான அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ்) கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கும்பமேளா தொடங்கியது. கங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த புனித நீராடலுக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் உணவு மற்றும் உறைவிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு அதிகப்படியான பக்தர்கள் வருகையால் கடுமையான கூட்ட நெரிசல் நிலவுகிறது. மௌனியா அமாவசையான நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 50 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விடடதாக கூறப்படுகிறது. காணாமல் போனோர் குறித்த அறிவிப்பு பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி இருந்தனர். இதுவரை 18 ஆயிரத்து 300 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி கேபி சிங் தெரிவித்தார்.
கடந்த முறை நடந்த கும்பமேளாவின் போதும் ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகே குடும்பத்துடன் அவர்கள் சேர்ந்தனர். இந்த ஆண்டு காணாமல் போனவர்களில் செல்போன் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதி இருப்பதால் விரைவில் குடும்பத்தினருடன் சேர்ந்துவிடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.