நாசிக்கில் கும்பமேளா: நிர்வாண சாதுக்கள், பக்தர்கள் ஆயிரக்காணக்கானோர் கோதாவரியில் புனித நீராடல்!
நாசிக்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவையொட்டி நாசிக்கில் நிர்வாண சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கோதாவரி ஆற்றில் புனித நீராடினர். இதையொட்டி நாசிக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்த கலசத்தை அசுரர்களிடம் இருந்து மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து பெற்ற போது 12 நாட்கள் போர் நடந்தது.
அப்போது கலசத்தில் இருந்து 4 துளிகள் அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் விழுந்தது; அந்த இடங்களில் நீராடினால் பாவங்கள், தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இந்த 4 இடங்களிலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் கும்பமேளா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சிம்ம ராசியில் சூரிய பகவானும், குரு பகவானும் சேர்ந்து சஞ்சரியிருக்கும் ஜுலை 14-ந் தேதி முதல் நாசிக்கில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இக்கும்பமேளா.
புனித நீராடல் நிகழ்ச்சி இன்று கோதாவரி நதிக்கரையில் நடைபெற்றது. முதலில் நிர்வாண சாதுக்கள் புனித நீராடினர்.
இதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடினர். அடுத்த மாதம் 25-ந் தேதி வரை முக்கிய நாட்களில் புனித நீராடல் நடைபெறும்.
கும்பமேளாக்களில் நிர்வாண சாதுக்களிடையே பல முறை மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.