ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் மகிழ்ச்சி- குஷ்பு
தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லி: இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது என்றும் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் சந்தோசப்படுவேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடப்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்பு நேற்று டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசினேன். கட்சியில் என்ன மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறினேன்.
ராகுல்காந்தி உற்சாகமாக இருக்கிறார். இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது. சில பணிகளை எனக்கு ராகுல் காந்தி தந்திருக்கிறார். அதை செய்து கொடுக்க வேண்டும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டால் ரொம்ப சந்தோஷப்படுவோம் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் அல்லாத குஷ்பு பொதுக்குழுவில் இடம்பெற்றது எப்படி என்று தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பினார். இது பற்றி குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், யார் இந்த கேள்வியை எழுப்புகிறார்களோ? அவர்கள் அதை உறுதி செய்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். உறுப்பினராக இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நான் எப்படி பேச முடியும்? ஒரு செய்தி தொடர்பாளராக எப்படி என்னால் செயல்பட முடியும்? என்று கேட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது நான் உறுப்பினர் ஆனேன். 2019ஆம் ஆண்டு வரை அந்த உறுப்பினர் அட்டைக்கு காலக்கெடு உள்ளது. கேள்வி எழுப்புகிறவர்கள் தங்களது வேலையை எப்படி செய்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.