கூலித் தொழிலாளியை உயிரோடு எரித்து வீடியோ எடுத்த கொலையாளி.. ராஜஸ்தானில் பயங்கரம்
ஜெய்ப்பூர்: லவ் ஜிகாத் விவகாரத்தில் ஒரு முஸ்லீம் இளைஞர் வெட்டப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை வீடியோவாக கொலையாளிகள் எடுத்துள்ள நிலையில், அது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் (48) என்ற கூலித் தொழிலாளி, ராஜஸ்தானின், ராஜ்சமந்த் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரை, சம்புலால் ரேகர் என்ற உள்ளூர்க்காரர் கொலை செய்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கோடாரியால் வெட்டு
சம்புலால் ரேகர், தனது நண்பர் ஒருவரோடு சேர்ந்து கொண்டு, அப்ரசுலை கொலை செய்துள்ளார். வேலை இருப்பதாக அழைத்து, அப்ரசுலை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார் சம்புலால்.
வீடியோவாக எடுத்தனர்
இந்த சம்பவத்தின்போது, சம்புலால் நண்பர் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தன்னை விட்டுவிடுமாறு, அப்ரசுல் கெஞ்சும் காட்சி இடம் பெற்றுள்ளது. கோடாரி தாக்குதலால் உயிருக்கு போராடிய அப்ரசுலை, சம்புலால் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
லவ் ஜிகாத்
கொலையாளியின் சகோதரியுடன், அப்ரசுல் கள்ள தொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்கு பழிவாங்க இந்த கொலை நடந்ததாகவும், இது லவ் ஜிகாத் வகை கொலையாக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. வீடியோவில் ஒரு பெண் இருப்பதும் பதிவாகியுள்ளது இந்த சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
வீடியோவில் ஆதாரங்கள் பதிவு
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதி எரிந்த நிலையில் கிடந்த அப்ரசுல் உடலை கைப்பற்றியுள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.